காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் உற்சவர் சிலை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் தலைமை ஸ்தபதி முத்தையாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 5.75 கிலோ தங்கத்தாலான உற்சவர் சிலை செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 9 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஸ்தபதி முத்தையா பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை திருச்சியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஸ்தபதி முத்தையாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். முத்தையா தனது கடவுச்சீட்டை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் 3 வார காலத்துக்கு ஆஜராக வேண்டும். அதன் பின்னர் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். உரிய பிணைத்தொகையுடன் இருநபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தவிர முத்தையா மீது வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவோ, கைது செய்யவோ தடை இல்லை என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.