துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கினை விசாரிக்க அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இந்த வாதங்களைத் தொடர்ந்து,
வழக்கு விசாரணை வரும் 27-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், 'சட்டப் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிடும் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட முடியுமா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது' என்றார். சட்டப் பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், இந்த வழக்கில் சட்டப் பேரவைச் செயலாளர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தவில்லை. எனவே பதில்மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார். இதனையடுத்து வழக்கை நீதிபதிகள் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.