6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை 90 நாள்களுக்குள் முடிக்கத் திட்டம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை 90 நாள்களுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2018, 8:39 pm

DIN

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை 90 நாள்களுக்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் பொது மேலாளர் சத்யப்பிரியா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது அரசு இத்தகவலைத் தெரிவித்துள்ளது. அவரது மனு,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 24 ஆண்டுகளாக சட்ட விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் 2-வது யூனிட் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தன. அப்போது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்விளைவாக ஸ்டெர் லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதற்கிடையே ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் ஆலை மூடப்பட்டதால் பராமரிப்பின்றி உள்ளது. 
இந்நிலையில் கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆலையில் கந்தக அமிலக்குழாயில் கசிவு ஏற்பட்டது. அப்போது இரவு நேரம் என்பதாலும், மின் இணைப்பு இல்லாததாலும் உரிய நேரத்துக்குச் சென்று குழாயில் ஏற்பட்ட கசிவைத் தடுக்க முடியவில்லை. இவற்றை தொடர்ந்து பராமரிக்காமல் இருந்தால் குழாய்களில் கசிவோ, வேறு ஏதேனும் ஆபத்துகளோ உண்டாக வாய்ப்புகள் உள்ளன.
இதனால் தொழிற்சாலையை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்ப உத்தரவிட வேண்டும். பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிகமாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது அரசு வழக்குரைஞர் இதுதொடர்பான அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்தார். அவர், மேலும் வாதிடுகையில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அமிலங்களை அகற்றுவது, இயந்திரங்களைப் பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 7 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்து, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பான முதற்கட்ட அறிக்கையும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை 90 நாள்களுக்குள் முடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் பணியாளர்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஸ்டெர் லைட் ஆலையின் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.