சென்னை: இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று துவங்கியதும் எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் எழுந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையானது மாசுக் கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளை மீறியதற்காக செலுத்தப்பட்ட அபாரதத் தொகை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா, அதன் நிலை என்ன என்பது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதில் அளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது.
அந்த ஆலை இயங்குவதற்கு என்று வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தற்பொழுது சீல் வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே மக்கள் இதுகுறித்து மீண்டும்,போராட வேண்டாம்.
ஆனால் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதற்கு எந்த தடையும் இல்லை.
நாட்டிலேயே அதிக அளவாக போராட்டங்கள் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் கையில் உருட்டுக் கட்டைகள், பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் என்ன பொதுமக்களா? சமூக விரோதிகள் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு முதல்வர் விரிவாக பதிலளித்தார்.