

சென்னை: வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சத்குரு என்று அறியப்படும் ஜக்கி வாசுதேவ் குரல் எழுப்பியுள்ளார்.
புதன்கிழமை தனது டிவிட்டர் பக்கத்தில் சத்குரு கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவது 'பொருளாதார தற்கொலை' என்று என்று வர்ணித்துள்ளார்.
தாமிர உருக்காலை குறித்து எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அளவில்லாத அளவுக்கு உள்ளதை அறிவேன். நாம் நமக்குத் தேவையான தாமிரத்தை நாமே தயாரித்துக் கொள்ளவில்லை என்றால், சீனாவில் இருந்து தான் வாங்க வேண்டியது வரும். புவியியல் மாசுபாடுகள் சட்டப்படி சரி செய்யப்பட வேண்டும். மிகப்பெரிய வர்த்தகத்தை அநியாயமாக மூடுவது பொருளாதார தற்கொலை என்று சத்குரு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
தூத்துக்குடி போராட்டம் குறித்து அவர் அளித்த பேட்டி தொடர்பாக பொதுமக்களின் விமரிசனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சத்குரு இந்த பதிவை மேற்கொண்டுள்ளார்.
லண்டனில் வேதாந்தா செயற்குழு நிர்வாகி அனில் அகர்வாலை யோகா குரு பாபா ராம்தேவ் சந்தித்திருந்தார். அதன் பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் இதேப்போன்று அனில் அகர்வாலை புகழ்ந்து டிவீட் செய்திருந்த பாபா ராம்தேவ், நாட்டில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையவும் அகர்வாலின் பங்களிப்பு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நடவடிக்கையில் சர்வதேச சதி இருப்பதாகவும், நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் தொழிற்சாலைகள் கோயிலுக்கு சமம் என்றும், அவற்றை மூடக் கூடாது என்றும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.