/

தாழ்த்தப்பட்டோருக்கு பணி: உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

தாழ்த்தப்பட்டோருக்கு பணி வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.

Updated On :29 மார்ச் 2018, 8:11 pm

தாழ்த்தப்பட்டோருக்கு பணி வாய்ப்பு வழங்குவது குறித்து மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணியிடங்களில் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரின் பிரநிதித்துவ விகிதம், அவர்களின் மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. இந்த சமூகத்தைச் சேர்ந்தோரின் பிரதிநிதித்துவத்தை உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் சத்யபால் சிங், 2016-17 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வின்படி, உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் இருக்கும் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சமூகத்தினர் முறையே 4.9, 8.3, 2.9 சதவீதமாக உள்ளனர்.
அதேநேரம் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த வகுப்பினரின் எண்ணிக்கை 14.2, 16.2, மற்றும் 8.2 சதவீதமாக உள்ளது. மத ரீதியான இட ஒதுக்கீடு இல்லையென்ற நிலையில், இஸ்லாமியர்களில் சிலர் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புகையில், இடஒதுக்கீட்டு முறையின்படி உடனுக்குடன் இஸ்லாமியர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துமாறு உயர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று பதில் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.