சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) வங்கி கிளையில் ரூ.32 லட்சம் பணம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இச்சம்பவம் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் 26-ந் தேதி காலை வங்கி ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது, வங்கி வாயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலும் வங்கியின் சுவரில் ஓட்டை போட்டு பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை நடத்திய சோதனையில், பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ரூ.32 லட்சம் பணம் மற்றும் 130 பைகளில் வைக்கப்பட்டிருந்த அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை உறுதி செய்தனர்.
இதில் அந்த வங்கியின் அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சிசிடிவி காட்சிகளின் தடவியல் ஆய்வுகளின் படி விசாரணையைத் துவங்கினர். இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த காவலாளிகள் ஹீலாராம், ஹர்பகதூர் மற்றும் ஓட்டுநர் ரமேஷ் ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.