சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள சந்தானத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி குறித்து விசாரிக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்டவர்களிடம் முழுமையான விசாரணை நடத்திய சந்தானம் தனது அறிக்கையினை தயாரித்து வருகிறார். வரும் 15-ஆம் தேதியன்று அவர் தனது அறிக்கையை ஆளுநரிடம் ஒப்படைப்பார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள சந்தானத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவானது வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவருக்கும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டதாவது:
சந்தானத்தின் விசாரணை அறிக்கை ஆளுநரிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட வேண்டும். விசாரணை அறிக்கையானது சீலிடப்பட்ட கவர் ஒன்றில் வைக்கப்பட வேண்டும். இது ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்குமே அளிக்கப்படக் கூடாது.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .