தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2-ஆவது கட்ட விரிவாக்கப் பணிக்காக தமிழக அரசு சிப்காட் வளாகத்தில் 342.22 ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனத்துக்கு ஒதுக்கியிருந்து. இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றது.
கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயரிழந்தனர். இதனால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வீரியம் அடைந்தது.
இதையடுத்து, சுற்றுச்சூழல் துறையின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு நேற்று (திங்கள்கிழமை) சீல் வைத்தது. இந்நிலையில், இன்று அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கையாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான நில ஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதற்காக ஸ்டெர்லைட் ஆலை வழங்கிய தொகை திருப்பி வழங்கப்படும் என்று சிப்காட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மின்சார துண்டிப்பு, சீல் வைப்பு, தற்போது நில ஒதுக்கீடு ரத்து என தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.