வார விடுமுறை நாள்களில் 7 காட்சிகள் திரையிடும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன? சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் தேவராஜன் தாக்கல் செய்த மனு விவரம்:
திரையரங்குகளில் வார நாள்களில் 4 காட்சிகளும் வார விடுமுறை நாள்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கு மாறாக விடுமுறை நாள்களில் காலை 5 மணி முதல் திரையரங்குகளில் 6 முதல் 7 காட்சிகள் வரை திரையிடப்படுகின்றன. தற்போது வெளியாகி உள்ள சீமராஜா, சாமி 2, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்கள் விதிகளை மீறி கூடுதல் காட்சிகள் திரையிடப்படுகின்றன. எனவே, கூடுதல் காட்சிகள் திரையிடும் திரையரங்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
நீதிபதிகளின் கேள்விகள்: இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:
கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளதா, அனுமதியை மீறி கூடுதல் காட்சிகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்க ஏதாவது விதிகள் உள்ளதா, வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாச் சேர்க்காமல், தலைமைச் செயலாளரை மட்டும் எதிர்மனுதாரராகச் சேர்க்க காரணம் என்ன எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
விளக்கம் அளிக்க உத்தரவு: மேலும், திரைப்படங்களை திரையிட அனுமதிக்கும் அதிகாரி யார், திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார், கூடுதல் காட்சிகள் திரையிடுவது தொடர்பாக ஏதேனும் அரசாணைகள் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்க அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









