காதலுக்கு மரியாதை என்று நாம் கேட்டிருப்போம். ஆனால் மனைவிக்கு மரியாதை.. இது வெறும் சொல்லாடல் மட்டும் அன்று. இன்று நாம் பார்க்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் மனைவிக்கு மரியாதை தராததுவே. மனைவிக்கு மரியாதை கொடுத்து பாருங்கள் குடும்பம் இன்பம் கொடுக்கின்ற இடமாக இலங்கும். இது வெறும் வார்த்தையாக மட்டும் இருக்கக் கூடாது என்பதற்காகவே அனைத்து மனவளக்கலை மன்றங்களிலும் மனைவி நல வேட்பு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகில் இதுவரை தந்தை நாள் (Father's day), தாயார் நாள் (Mother's day) தனித்தனியே கொண்டாடுகிறார்கள். சுமங்கலி பூஜை என்றளவிலே கணவன் நல வேட்பு நாளும் கொண்டாடுகின்றார்கள். மனைவி நல வேட்பு நாள் எந்த ஊரிலேயும் இல்லை. இது ஒரு நன்றி கெட்டதனம் இல்லையா? இது என் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், ஒருவர் தலையிட்டுச் செய்தால் மட்டும் போதாது. இது நாடு முழுவதும் ஆண் மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பெண்மையைப் போற்றி பணிந்து புகழ்ந்து வாழ்ந்த மனிதன் எப்போதும் கெட்டதில்லை. பெண்ணினத்தை மதிக்காத தனி மனிதனோ, சமுதாயமோ உயர்வடைந்ததாக சரித்திரம் இல்லை. எந்தச் சமுதாயம் பெண்மையைப் போற்றி அவர்களுக்கு மதிப்பளித்து வாழ்கிறதோ அந்தச் சமுதாயம் தான் அறிவிலும், ஆன்மீகத்திலும் சிறப்புற்று விளங்கும்.
பெண்மையின் பெருமையை உணர வேண்டும் என்ற மனதோடு ஆராய்ச்சி செய்த போது இந்த ஆண்டு என் மனைவியினுடைய (அருள் அன்னை லோகாம்பாள்) பிறந்த நாள் 30.8.ல் வந்தது. அன்பர்களிடம் சொன்னேன். என் மனைவியின் பிறந்த நாளையே வைத்துத் தொடங்கி மனைவி நல வேட்பு நாள் கொண்டாடலாம். இதையே வைத்துக் கொண்டு, இது முதல் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆவது நாளை மனைவி நல வேட்பு நாளாகக் கொண்டாடுவது நம் சங்கத்தின் வழக்கமாக வரட்டும். பிறகு உலக நாடுகளிலும் பரவட்டும் என்றேன். ஆண்களும், பெண்களும் உற்சாகமாக அதை ஏற்றுக் கொண்டு பல இடங்களில் கொண்டாடுகிறார்கள். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையை நன்றியோடு வாழ்த்தி இக்கவியைச் சொல்லி மகிழுங்கள்.
பெற்றோரைப் பிறந்தகத்தைப் பிறந்த ஊரை விட்டுப்
பிரிந்து வந்து, பெருநோக்கில் கடமையறம் ஆற்றப்,
பற்றற்ற துறவியெனக் குடும்பத்தொண்டேற்றுப்
பண்பாட்டின் அடிப்படையில் எனைப் பதியாய்க் கொண்டுஎன்
நற்றவத்தால் என் வாழ்க்கைத் துணையாகிப் பெண்மை
நல நோக்கில் அன்போடு கருணை இவை கொண்டு
மற்றவர்க்கும் தொண்டாற்றும் மாண்புமிக்க எந்தன்
மனைவியை நான் மதிக்கின்றேன் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
என்று நம் குருபிரான் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அருளியிருக்கின்றார்கள்.
மனைவியர் தினமான இந்நன்னாளில் பெற்றோரை, பிறந்த ஊரை,.உறவுகளைப் பிரிந்து, உங்களுக்குத் தொண்டாற்றி, இனிமையாக, இன்பமாக உங்களுக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்து வாழும் அன்புக்கும், பாசத்துக்கும் உரித்துடைய மனைவியை ஒவ்வொரு கணவரும் மதித்து, வாழ்த்தி உங்களின் மாசற்ற அன்பினால் அவர்களை நனைத்திடுங்கள்.
ஒவ்வொரு கணவன் – மனைவி உறவை உயிரிலும் மேலானதாக மதித்துப் போற்ற வேண்டும். உடல், பொருள், ஆற்றல் என்ற மூன்றையும் ஒருவருக்கொருவர் மனதார அர்ப்பணித்து, இன்ப, துண்பங்களில் பங்கு கொண்டும் வாழும் பெருமை கணவன், மனைவி உறவில் தான் அதிகமாக அடங்கியுள்ளது. தமது பண்பாட்டின்படி பார்த்தால், பெண்கள் இயற்கையிலேயே தியாகிகள் என்று சொல்லலாம். கணவன் வீட்டுக்கு வரும்போதே தாய் தந்தை, பிறந்த வீட்டுச் சூழ்நிலை எல்லாவற்றையும் துறந்துவிட்டுத்தான் வருகிறார்கள். திருமண வாழ்ககையைத் தொடங்குவதற்கு முன்பே, துறந்து வரக்கூடிய ஒரு இயல்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. இப்படி எல்லாவற்றையும் துறந்து விட்டு இங்கே அன்பு நாடிவந்த பெண்ணுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை ஒவ்வொரு கணவனும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு மனைவி என்ற மதிப்பு மட்டுமல்ல.. பெண்மையும், தாய்மையும் ததும்பும் எல்லோருக்கும் தர வேண்டிய அதே மதிப்பு நம் வீட்டுக்கு வாழ வந்த பெண்ணுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
கணவன் - மனைவி உறவில் இந்தப் பண்பாடும் தியாகமும் இருந்தால் போதும் அதைவிடப் பெரிய இன்பம் இந்த உலகத்தில் வேறு இருக்க முடியாது. ஒருவருக்கொருவர் சச்சரவு இல்லாத குடும்பத்தில்தான் குழந்தை நன்றாக இருக்கும். பிரச்னை உள்ள குடும்பங்களில் அடக்கு முறைக்கு குழந்தைகளின் சுதந்திரம் பறிபோகும்.
இந்தப் போராட்டத்தால் குழந்தையின் உடல்நலமும்,மனநலமும் கெடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் உதவிசெய்தும் வாழ்வதுதான் திருமண பந்தம் என்பதைப் புரிந்து கொண்ட வீடுகளில் இந்தப் போராட்டம் இல்லை. விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் ஒரு பிடியைப் பிடித்துக் கொண்டு “என் கருத்துதான் உயர்ந்தது” என பிடிவாதம் காட்டினால் பிணக்குதான் வரும்.
கணவனும், மனைவியும் நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை நினைவில் வைத்துக் கொண்டால், மற்ற விஷயங்களில் எந்தக் குறையும் இருக்காது. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரின் உறவினர்களும்; விருந்தினர்களாக வரவாய்ப்புகள் உண்டு. அவர்களை ஒத்த மதிப்போடு இருவரும் உபசரிப்பது கணவன் – மனைவி இடையே அன்பு வளரச் செய்யும். எளிய உணவேயாயினும் விருந்தினரை உபசரிப்பதில் இன்முகம் காட்டுங்கள்.
‘இறைவனே மனைவி வடிவத்தில் வந்து எனக்குத் துணையாக இருக்கிறான்.’ என கணவன் நினைக்க வேண்டும். மனைவியும் கணவனை இப்படி கடவுளின் வடிவமாகவே தனக்கு உறவாகி வந்ததாக நினைக்க வேண்டும். இப்படி ஒருவரிடம் இன்னொருவர் தெய்வநிலையைக் கண்டுவிட்டால் போதும்.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் வலிமை கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் யாரும் அனுபவித்து இருக்காத மலர்ச்சி கிடைக்கும்.
இத்தகு சீரும் சிறப்பும் மிக்க விழா கூடுவாஞ்சேரியில் 02/09/2018 அன்று காலை 9 மணி முதல் அருணாசலா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடு நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுக.
- ராகேஸ் TUT