புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ரஃபேல் ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை: சச்சின் பைலட் வலியுறுத்தல்

ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் கூறினார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 9:13 pm


ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் கூறினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: இந்தியாவின் பாதுகாப்புக்கு 126 போர் விமானங்கள் வாங்க வேண்டும் என்று மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இந்திய விமானப்படை கோரிக்கை வைத்தது. அதன்படி, காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. 
ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி ஏற்பட்டது. பாஜக ஆட்சியில் அதே போர் விமானத்தை 3 மடங்கு விலையாக, அதாவது ஒரு விமானத்தை ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இதே விமானத்தைக் குறைவான விலைக்கு வாங்கி உள்ளன. 
36 ரஃபேல் போர் விமானங்களுக்காக மட்டுமே மக்கள் வரிப்பணம் ரூ.41, 205 கோடி அளவுக்குக் கூடுதலாகக் கொடுக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பான விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல், பாதுகாப்பைக் காரணமாக கூறி மக்களை பாஜக அரசு ஏமாற்றி வருகிறது.
நாட்டுக்கு அவசரமாகத் தேவை என்று ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகும் 4 ஆண்டுகளாகியும் விமானங்கள் இதுவரை வாங்கப்படவில்லை. 
விமானம் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பொதுத்துறை நிறுவனத்தை நீக்கி விட்டு, 12 நாள்களுக்கு முன் உருவாக்கப்பட்ட விமான உற்பத்தியில் அனுபவம் இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வரும் சூழ்நிலையில் பொதுத்துறை நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டு இருந்தால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். 
இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்காமல், மான் கீ பாத் நிகழ்ச்சியில் மட்டுமே பேசி வருகிறார். இந்த பிரச்னையைப் பொருத்தவரை அரசே முன்வந்து விளக்கம் அளித்தால் தான் தீர்வு கிடைக்கும். 
ரஃபேல் ஊழல் குறித்து மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்றார்.
பேட்டியின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்பட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.