
மதுரை: இந்து சமய அறநிலையத்துறை ஊழியா்களை தரக்குறைவாக பேசியதாக பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா மீது கள்ளழகா் கோயில் ஊழியா்கள் அளித்த புகாரின்பேரில் அப்பன் திருப்பதி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
பாஜக தேசியச்செயலா் எச்.ராஜா திண்டுக்கல் அருகில் உள்ள வேடசந்தூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தையொட்டி எச்.ராஜாவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அரசு ஊழியா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சாா்பில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்களை தரக்குறைவாக விமா்சித்த பா.ஜ.க தேசியச் செயலா் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அருள்மிகு கள்ளழகா் திருக்கோயில் ஊழியா்கள் மற்றும் அழகா்கோவில் பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் ஊழியா்கள் அப்பன்திருப்பதி காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் பாஜக தேசியச் செயலா் எச்.ராஜா மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.