மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டியில் 197 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் "எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை, நிதி ஒதுக்கவில்லை, கட்டுமானம் தொடர்பாக எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் ஹக்கீம் என்பவர் கேள்வி எழுப்பியதன் விளைவாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் இத்தகவலை அளித்துள்ளது.
ஆனால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதில் எந்தத் தடையும் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட தகவல் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடக் கூறினார்.
அதுபோன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.