புது தில்லி: இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பிளவு பட்ட பின்னர் சின்னம் தொடர்பான வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் இரட்டை இலை தொடர்பான கோரிக்கை முடித்து வைக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்புக்கு ஒதுக்கி உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இது விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.