சென்னை: பொன்னமராவதி மோதல் சம்பவத்திற்கு காரணமான வாட்ஸ் அப் விடியோ வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளரின் சமூகத்தைக் கிண்டல் செய்தும், அந்தச் சமூகத்துப் பெண்களை அவதூறாகப் பேசியும் இரு இளைஞர்கள் வாட்ஸ் அப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டனர். இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி வட்டத்துக்குள்பட்ட பல கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
அப்போது, நடைபெற்ற கல்வீச்சில் 8 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும், 3 போலீஸார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். நிலைமை கட்டுக்குள் வராததால், துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் 3 தினங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் சட்டவிரோதமாக கூடி பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த அடையாளம் தெரியாத 1000 பேர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொன்னமராவதி அவதூறு சம்பவத்திற்கு காரணமான வாட்ஸ் அப் விடியோ வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டையை அடுத்த கண்டிச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் வசந்த ஆகிய இருவர் இந்த விடியோவை வாட்ஸ் அப்பில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.
இவர்களில் செல்வகுமார் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். எனவே அவரை சென்னை வரவழைத்து போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.