நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்திகேயனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் 

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்திகேயனை, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்திகேயனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் 
Published on
Updated on
1 min read

நெல்லை: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்திகேயனை, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றியவர் உமா மகேஸ்வரி (65). திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும் இருந்துவந்தார். இவர், தனது கணவர் முருகசங்கரனுடன் (72) திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். மேலப்பாளையம் அமுதா பீட் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (40)  இவர்களுடைய வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தார். 

கடந்த 23 ஆம் தேதி வீட்டில் இருந்த 3 பேரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க மாநகரக் காவல் ஆணையர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், துணை ஆணையர்கள் சரவணன், மகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார், வீட்டின் அருகே உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்லிடப்பேசி உரையாடல் ஆகியவற்றைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

இதனடிப்படையில், திமுக பெண் பிரமுகரும், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினருமான சீனியம்மாளின் மகன், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயனை (33) போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில், 3 பேரையும் தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டாராம். இந்த நிலையில், கார்த்திகேயன் கொலைக்குப் பயன்படுத்திய 2 கத்திகளை பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை போலீஸார் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, சாந்திநகரில் உள்ள கார்த்திகேயன் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கொலை நடந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டில் இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 21 பவுன் நகைகளை போலீஸார் மீட்டனர்.

அதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அதைத் தொடர்ந்து, மகாராஜநகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள திருநெல்வேலி ஐந்தாவது நீதித்துறை நடுவர் நிஷாந்தினி வீட்டில் கார்த்திகேயன் நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 14வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க  நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து, கார்த்திகேயன் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கார்த்திகேயனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரி போலீஸார் ஜெ.எம்.-1 நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். குறைந்தது 7 நாட்களாவது விசாரிக்க போலீஸார் அனுமதி கோரியிருந்த நிலையில் 5 நாட்கள் விசாரணைக்கு மட்டும் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com