சென்னை: பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்காமல், குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்தது தமிழினத்துக்கு அதிமுக செய்தது துரோகம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல் கூறியதாவது, அதிகாரம் மக்கள் கையில் உள்ளவரைத்தான் ஜனநாயகம். இது தேச விரோத சக்தியின் வீழ்ச்சிகளின் தொடக்கம். பாகிஸ்தான் இந்துவுக்கு ஒரு நியாயம், இலங்கை இந்துவுக்கு ஒரு நியாயமா? என்றும் கமல் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், கிராமங்களில் விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்காமல், மத ரீதியாக மக்களைப் பிரிக்கப் பார்க்கிறது மத்திய அரசு. போராடினால் குரலை நசுக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். பின்னோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்காமல், குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.