சென்னை: ஆண்டுதோறும் பா.ம.க. வெளியிடும் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை, வரும் 6-ஆம் தேதியன்று ராமதாஸ் வெளியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி திங்களன்று வெளியிட்டுள்ள அறி க்கையில் தெரிவித்துள்ளதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 2003-04 ஆம் ஆண்டு முதல் பொது நிழல் நிதிநிலை அறிக்கைகளை மக்கள் மன்றத்தில் வெளியிட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 16 நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ள நிலையில், 2019-20 ஆம் ஆண்டுக்கான, 17-ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கை நாளை மறுநாள் 6-ஆம் தேதி புதன்கிழமை வெளியிடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை தியாகராயர் நகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நாளை மறுநாள் புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்து கொண்டு பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிடவுள்ளார். வழக்கம்போலவே தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு பெருக்கம், வறுமை ஒழிப்பு, பெண் குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து அற்புதமான ஆலோசனைகள் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.