மதுரை: லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என்றும் அவர்கள் மீதுதேசத்துரோக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் பொறுப்புக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் நடைபெற்றது.இந்தத் தேர்வில், சுமார் 80 ஆயிரம் பேர் வரை கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.
ஆனால் இவ்வாண்டு ஜனவரி 1 -ஆம் தேதியன்று குறிப்பிட்ட அந்த தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் ஏற்கனவே சட்டவிரோதமாக வெளியாகியிருப்பதாகத் தகவல் பரவியது. இதுகுறித்து அப்போது வாட்ஸ் ஆப்பில் படங்களுடன் கூடிய தகவல் வைரலாகப் பரவியது.
அதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு சிலருக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பாணையும் அனுப்பப்பட்டது. அத்துடன் குறிப்பிட்ட பதவியைப் பெற்றுத் தருவதற்காக லஞ்சம் பெருமளவில் கைமாறுவதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து மதுரையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கானது திங்களன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
லஞ்சம் வாங்குவது என்பது தற்போது அதிக அளவில் பரவி வருகிறது. எனவே இதனை ஒழிக்க லஞ்சம் வாங்குவோரைத் தூக்கில் போட வேண்டும்; அவர்கள் மீதுதேசத்துரோக வழக்குத் தொடரப்பட வேண்டும். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு ஆவேசமாகத் தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் பொறுப்புக்கான தேர்வுகள் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.