சென்னை: கடத்தப்பட்ட அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படை விமானங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் மாயமாகியுள்ளார்.
இந்த சண்டையில் இந்திய விமானப் படையின் மிக் ரக விமானத்தை துரதிருஷ்டவசமாக இழந்துள்ளோம் என்றும், அதில் இருந்த விமானி மாயமானதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் புதன் காலை உறுதி செய்துள்ளார்.
அதேசமயம் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் தங்கள் வசம் இருப்பாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சில விடியோக்களையும் வெளியிட்டுள்ளது. ஆனால் முதலில் இதனை இந்திய வெளியுறவுத் துறை உறுதி செய்யவில்லை. விசாரணை நடப்பதாக மட்டும் கூறி இருந்தது. ஆனால் சற்று முன்னர் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய விமானியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் கடத்தப்பட்ட அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
எனது எண்ணமெல்லாம் அபிநந்தனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமே இருக்கிறது. இந்திய விமானப்படை விமானி அபிந தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.