சென்னை மெட்ரோ ரயில் சேவையில் 2018ம் ஆண்டு ஒரு மகத்தான ஆண்டாகவே அமைந்தது. அந்த வகையில் வடசென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவையால் 2019 நிச்சயம் மகத்தான ஆண்டாக மாறும் வாய்ப்பு உள்ளது.
அதாவது 2018ம் ஆண்டில் சென்னை சென்டிரல் - செயின்ட் தாமஸ் மௌண்ட் இடையேயான பச்சை நிற வழித்தடமும், ஏஜி - டிஎம்எஸ் முதல் சென்னை விமான நிலையம் வரையிலான நீல நிற வழித்தடமும் இயக்கப்பட்டு முழுப் பயன்பாட்டுக்கு வந்தது.
தற்போது வட சென்னையையும் மெட்ரோ ரயில் சேவையில் இணைக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த மாத இறுதிக்குள் சென்னை சென்டிரல் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்னை சென்டிரல் முதல் ஏஜி டிஎம்எஸ் வரையிலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் சோதனை ஓட்டம் நடைபெற உள்ள இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 அல்லது 11ம் தேதிகளில் இவ்விழா நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மிகக் குறுகிய சாலை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் அவதிக்குள்ளாகிவரும் வடசென்னை மக்களுக்கு இந்த மெட்ரோ ரயில் சேவையால் மிகப்பெரிய நிம்மதியும், வசதியும் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
மெட்ரோ ரயில் சேவை திட்டம் துவங்கப்பட்டதால் வடசென்னை மக்கள் இதுவரைபட்ட அனைத்து துன்பங்களுக்கும் இனி ஒரு விடிவுகாலம் பிறக்கும்.