பொங்கல் சிறப்பு பேருந்து: சென்னையில் இருந்து 4.93 லட்சம் பேர் பயணம்; ரூ.8.26 கோடி வசூல்!

பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து கடந்த மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் 4.93 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு 
பொங்கல் சிறப்பு பேருந்து: சென்னையில் இருந்து 4.93 லட்சம் பேர் பயணம்; ரூ.8.26 கோடி வசூல்!
Published on
Updated on
1 min read


சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து கடந்த மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் 4.93 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என தமிழக போக்குவரத்துத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 2,275 பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளாக ஜனவரி 11 முதல் 14 வரை நான்கு நாள்களுக்கு 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 14,263 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல, பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பிவருவதற்கு வசதியாக ஜனவரி 17 முதல் 20 வரை பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு மொத்தமாக 3,776 பேருந்துகளும், பிற முக்கிய பகுதிகளிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,841 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. 

சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்குச் செல்வர்கள் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வெளியூர் பேருந்துகள் கோயம்பேடு பேருந்துநிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்துநிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் என 5 இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.  பயணிகளின் வசதிக்காக 4 இடங்களில் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்துநிலையத்தில் மட்டும் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக சென்னையில் இருந்து கடந்த மூன்று நாட்களில் அரசு பேருந்துகளில் 4.93 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என தமிழக போக்குவரத்துத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1,40,700 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து இதுவரை 2,573 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் இதுவரை 1,221 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு மட்டும் 1.72 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்றும், பொங்கல் சிறப்பு பேருந்துகள் டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.8.26 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com