காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு நாளை முதல் கட்டணம் கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். கடந்த 1979-ம் ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் மீண்டும் திங்கள் முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை 48 நாட்கள் அருள்பாலிக்கிறார்.
இதனையொட்டி அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை கடந்த 27-ந்தேதி அதிகாலை திருக்குளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்ட சிலைக்கு அங்கு வைத்து தைலக்காப்பு, சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
பின்னர் ஞாயிறு இரவு அத்திவரதருக்கு உடல் முழுவதும் தைலகாப்பு தடவப்பட்டு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து திங்கள் அதிகாலை 5 மணி முதல் அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலும் நீளும் வரிசையில் நின்று, தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு நாளை முதல் ரூ.50 கட்டணம் கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா இதனை தெரிவித்துள்ளார்.