சென்னை: தமிழகத்தில் மீனவர்களுக்கு மீன்பிடித் தடை காலத்துக்கான நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 60 நாட்களுக்கு, மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மீன்பிடி தடை காலத்தின் போது விசைப்படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுட்டனர்.
தடை காலத்தில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் நாட்டுப்படகில் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வர அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்து வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மீனவர்களுக்கு மீன்பிடித் தடை காலத்துக்கான நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிறன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும். கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும்.
மொத்த நிவாரணத்தொகையாக ரூ. 83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.