சென்னை: விமானி அபிநந்தனுக்கு ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அத்துமீறி இந்திய வான் வெளிக்குள் பிரவேசித்த பாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்று தாக்கும் போது, இந்திய விமானி அபிநந்தன் பயணித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாராசூட்டில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்த அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறை பிடித்தனர். பின்னர் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அவர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.
தற்போது அவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் விமானி அபிநந்தனுக்கு ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'அண்டை நாட்டில் தனது வீரத்தை வெளிப்படுத்திய விங் கமாண்டர் அபிநந்தனின் சாதனையைப் பெருமைப்படுத்த வேண்டும். அதற்காக ராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கி அபிநந்தனை கௌரவப்படுத்த வேண்டுமென்று' தெரிவித்துள்ளார்.