புது தில்லி: இரட்டை இலை சின்னம் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாய் எதிர்த்து டிடிவி தினகரன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செயப்பட்டுள்ளன.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது சரியே என்று தில்லி உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த 2017, நவம்பர் 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்.
மேலும், இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றில் குக்கர் சின்னத்தையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் வரும் 15-ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.