பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் ஏற்கனவே பற்றி எரியும் நிலையில், மேலும் ஒரு பாலியல் புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன், பேஸ்புக் மூலம் பேசி, பழகி, ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு என்னும் வாலிபன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர்களில் சதீஷ், சபரிராஜன், வசந்த்குமார் உட்பட 7 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் புகார் அளித்த 19 வயது கல்லூரி மாணவியின் சகோதரரைத் தாக்கிய மூவர்
பிணையில் வெளிவந்து விட்டனர். பின்னர் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் தொடர்புடையவரும் ,பெண்ணின் சகோதரரைத் தாக்கியவருமான அதிமுக பிரமுகர் 'பார்' நாகராஜ் என்பவரை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமையைகம் திங்கள் மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சிகள் தரப்பு மற்றும் இந்த சம்பவத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புக் குரலையடுத்து இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதேநேரம் இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதாக, செவ்வாயன்று தகவல் வெளியானது.
இந்நிலையில் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் ஏற்கனவே பற்றி எரியும் நிலையில், மேலும் ஒரு பாலியல் புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் செவ்வாயன்று அளித்த புகாரில், இளைஞரொருவர் தன்னை காதலிப்பதாகக் கூறி, நெருங்கிப் பழகி பாலியல் வன்கொடுமை செய்தார் என்றும், அதை புகைப்படமெடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பாலியல் கொடுமை செய்துவருவதாகவும் புகார் கூறியுள்ளார்.
போலீசார் இந்த புகார் மீது உடனடியாக எதுவும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இதுதொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இதை அடுத்து போலீசார் உடனடியாக களத்தில் இறங்கி பாலா என்பவரைக் கைது செய்தனர்.
இவரால் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த இளம்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.