சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு, நெடுந்தீவுக் கிடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 7 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 30 க்கும் மேற்பட்ட வலைகளை அறுத்து எறிந்துள்ளனர்.
மேலும் இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன் அந்தப்படகுகளில் இருந்த கோபிராஜ், செல்வம், முருகன், நாகராஜன், சூலியான்ஸ், ராஜ், இருளப்பன், பால்ராஜ், ராமநாதன், பூமிநாதன், பிரசிடன் ஆகிய 11 மீனவர்களையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைந்துள்ளனர்.
இலங்கை கடற்படையின் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்திட மத்திய மோடி அரசும், தமிழகத்தின் எடப்பாடி பழனிச்சாமி அரசும் எத்தகைய நிரந்தர நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளன.
இலங்ககை கடற்படையின் இத்தகைய அராஜக நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 மீனவர்களையும் உடனே விடுவிக்கவும், இரண்டு விசைப்படகுகளையும் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகின்றது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.