தமிழகத்தில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. கடந்த ஜனவரி 8-ஆம் தேதி ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை கடலூர், ராமநாதபுரம், சேலம், சிதம்பரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் திங்கள்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
அப்போது கடலூர் லால்பேட் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவரது வீட்டில் நடந்த சோதனையில் 3 லேப்டாப்கள், 3 ஹார்ட் டிஸ்க்கள், 16 மொபைல் ஃபோன்கள் மற்றும் 8 சிம் கார்டுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்த ஆவணங்களில் நடந்த சோதனையில் 'ஷஹாதத் தான் நமது குறிக்கோள்' எனும் வாட்ஸ்ஆப் குழு இயங்கி வந்ததும் அதில் 10 பேர் இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அப்துல் ரஷீதை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 2018, ஏப்ரல் மாதம் ஐஎஸ் பயங்கரவாதம் தொடர்பாக கீழக்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மே 2-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய தமிழகத்தில் உள்ள 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவ்விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியேறினர். ஒருவர் மட்டும் தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் சேகரிப்பு, அதற்கான நிதி பெறுவது, சிறையில் உள்ள பயங்கரவாதிகளை தப்பிக்கவைப்பது மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது உள்ளிட்ட குற்றச்செயல்களை தமிழகத்தில் நடத்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை 2018-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.