கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் லாக்கப் மரணம்: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மா.கம்யூ வலியுறுத்தல் 

கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் நிகழ்ந்துள்ள லாக்கப் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துவதுடன், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
Published on
Updated on
1 min read

சென்னை: கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் நிகழ்ந்துள்ள லாக்கப் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்துவதுடன், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், புளியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  மதன்குமார் (வயது 20) என்பவரை கடந்த 5.9.2019 அன்று கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு ஒன்றின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், போலீஸ் காவலில் இருந்த மதன்குமார்  7.9.2019 அன்றிரவு இறந்துள்ளார். போலீஸ் காவலில் இருந்த மதன்குமாரை காவல்துறையினர் அடித்து, துன்புறுத்தி, சித்தரவதை செய்ததன் விளைவாகவே அவர் இறந்துள்ளார் என்பது கிடைக்கப்பெற்ற தகவல்களின் மூலம்  தெரிய வருகிறது.  கிருஷ்ணகிரி காவல்துறையினரின் இந்த சட்டவிரோத, மனித உரிமை மீறல் நடவடிக்கைகயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதனை தடுக்க வேண்டிய தமிழக அரசோ, காவல்துறை உயர்அதிகாரிகளோ எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாததன் விளைவே இதுபோன்ற லாக்கப் மரணங்களும், மனித உரிமை அத்துமீறல் செயல்களும் அதிகரித்து வருகின்றது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே மதன்குமார் கொலையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவரின் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு  செய்து, உடனே கைது செய்ய வேண்டுமெனவும், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், உயிரிழந்த மதன்குமார் குடும்பத்திற்கு 50  லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com