நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளைக் கொண்டு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
நாமக்கல் நகரில் 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். தங்ககவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி, முத்தங்கி அலங்காரம், வெண்ணைக்காப்பு அலங்காரம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும், வெற்றிலையால் ஆன அலங்காரம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஒரு லட்சத்து எட்டு வெற்றிலைகளைக் கொண்டு அலங்காரம் செய்ய முன்வந்தார். இதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல், திருச்சியில் உள்ள ஓர் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. வாழைமட்டையில் வெற்றிலையை பொருத்தி அவற்றை ஆஞ்சநேயருக்கு சாத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்ட பிறகு நண்பகல் 12 மணி முதல் 1 மணியளவில், வெற்றிலை அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரமானது ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை(அபிஷேகத்துக்கு முன்பாக) சுவாமி மீது சாத்தப்பட்டிருக்கும்.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் பி.ரமேஷ் கூறியது: புரட்டாசி மாதப் பிறப்புக்கு முன்னதாக வரும் சனிக்கிழமை உற்சவ பெருவிழாவாகக் கொண்டாடப்படும். அதனையொட்டி, திருச்சியைச் சேர்ந்த உபயதாரர் மூலம் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது என்றார்.