
சென்னை: கைது செய்யப்பட்டுள்ள திருப்பூர் விவசாயிகள் இயக்கத் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் செயலாளர் முத்தரசன் ஞாயிறன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
மத்திய அரசின் பவர்கீரீட் நிறுவனம் விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைத் தவிர்த்து, மாற்று வழியில் மின்பாதை அமைக்க வேண்டும் என விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
கடந்த 14.09.2019 சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகில் உள்ள வட சின்னாரிபாளையம் அருகில் ஒரு விவசாயி நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும், தகவலும் கொடுக்காமல், நிலவுடையாளரின் ஒப்புதலும் பெறாமல் நிலத்தை அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த விவசாயிகள் ஒருங்கிணைந்து நிலம் அளக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையொட்டி காவல்துறை தலையிட்டு பேசி தீர்வு காணலாம் என விவசாயிகள் இயக்கத் தலைவர்கள் வழக்கறிஞர் ஈசன் உட்பட சிலரை காவல் நிலையம் அழைத்து சென்று, அங்கு வஞ்சகமாக வழக்கு பதிவு செய்து, அவர்களை கோவை மத்திய சிறையில் வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசின் விவசாய விரோதக் கொள்கைகளையும், அதன் அடக்குமுறை நடவடிக்கைகளையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
கைது செய்யப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்கள் எதிர்ப்பு இயக்கத் தலைவர்கள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.