ஹிந்தித் திணிப்பை எதிர்த்து செப்., 20-இல் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்.20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம், கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள் மாலை துவங்கியது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு முயற்சிகள், நாட்டின் பொருளாதார சூழல், மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
உடல்நலக்குறைபாடு காரணமாக அறிவாலயக் கூட்டத்தில் க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மற்றும் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
கூட்டத்தின் இறுதியில் இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசைக் கண்டித்து செப்.20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.