ரூ.20 கட்டணத்தில் திருத்தப்பட்ட குடும்ப அட்டை பெறும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

மின்னணு குடும்ப அட்டைகளைத் திருத்தி புதிய அட்டைகளைப் பெறும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
அச்சிடப்பட்ட மின்னணு  குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு  தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
அச்சிடப்பட்ட மின்னணு  குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு  தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
Published on
Updated on
1 min read


மின்னணு குடும்ப அட்டைகளைத் திருத்தி புதிய அட்டைகளைப் பெறும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டத்தை முழுமையாகக் கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ், பழைய காகித வடிவிலான குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக, மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. 

இந்தத் திட்டத்தின்படி, புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்வோருக்கும் அட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது அனைத்து மின்னணு குடும்ப அட்டைகளும் மைய அளவில் சென்னையில் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

திருத்தங்கள் கோருதல்: மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்கள் அனைத்தும் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகப் பெறப்படுகிறது. இதன்பின் துறை அலுவலர்களின் கள ஆய்வுக்குப் பிறகு கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் மட்டுமே புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்படுவதால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ரூ.20 கட்டணம்: புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தேவைப்படும் பயனாளிகளுக்கு மாவட்ட அளவிலேயே புதிய அட்டைகள் விலையில்லாமல் அச்சிட்டு வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
மேலும், நடைமுறையில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் பயனாளிகள் கோரிய திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட குடும்ப அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம்.

மாவட்ட அளவில் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், சென்னையில் உதவி ஆணையர் அலுவலகங்களிலும் ரூ.20 கட்டணம் செலுத்தி திருத்தப்பட்ட குடும்ப அட்டையைப் பெறலாம். 5 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி இந்தத் திட்டத்தை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com