சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்ததாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில், இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 25ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தில் 15 செ.மீ., கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ., பட்டுக்கோட்டையில் 11 செ.மீ., உளூந்தூர்பேட்டையில்- 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
குமரி கடல் பகுதி, மாலத்தீவு, தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இன்றும், நாளையும் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.