விவசாயிகளுக்கான தத்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக மின்துறை அமைச்சர் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வீடுகள், தொழிற்சாலைகள், வணிகக் கட்டங்கள் என அனைத்துக்கும் மின் வாரியம் மற்றும் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை விநியோகித்து வருகிறது. இதற்கான மின் விநியோகத்தை ஆங்காங்கே அமைக்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு சாதாரணம், சுயநிதி என இரண்டு பிரிவுகளில் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின் வழித்தட செலவை மின் வாரியம் ஏற்பதுடன், மின்சாரமும் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. சுயநிதி பிரிவில் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். மின்சாரம் மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் விரைவாக மின் இணைப்பு வழங்கும் நோக்கில் தத்கல் மின் திட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாமக்கல்லை அடுத்த புதுப்பட்டி பகுதியில் உள்ள ஜங்கலாபுரத்தில் சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரசேகரன் தொகுதி நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதீப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விவசாயிகளுக்கான தத்கல் மின் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறுவதற்கு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கு செப்டம்பர் 30 ஆம் தேதி டெண்டர் விடப்படும். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.
கீழடி அகழாய்வு பொறுத்தவரை தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருவதாகவும், மத்திய அரசோடு இணைந்து அகழாய்வு தொடர்ந்து நடைபெறும். நாட்டின் நலன் கருதி கீழடியை அரசியல் ஆக்காமல் பார்க்க வேண்டும் என்று கூறினார் தங்கமணி.