தேர்தல் ஆணையமா? ஆளுங்கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டா?: மா.கம்யூ., ஆவேசம் 

தேர்தல் ஆணையமா? ஆளுங்கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டா? என்று தேர்தல்  ஆணையத்தின்  நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
தேர்தல் ஆணையமா? ஆளுங்கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டா?: மா.கம்யூ., ஆவேசம் 

சென்னை: தேர்தல் ஆணையமா? ஆளுங்கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டா? என்று தேர்தல்  ஆணையத்தின்  நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகின்றனர். ஏற்கனவே வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆளுங்கட்சிகளின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் தேர்தலை ரத்து செய்துள்ளது.

இதனுடைய அடுத்தக்கட்டமாக நேற்று (16.04.2019) இரவு 8 மணிக்கு திமுக வேட்பாளர் கவிஞர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தலை ரத்து செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். இதற்கு முன்பு தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர். இவ்வாறு மாறி, மாறி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கட்சிகளின் தலைவர்களின் வீடுகளிலும், வேட்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தும் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம், புகார்கள் அளித்த பின்பும் பகிரங்கமாக பண விநியோகத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக, பாஜக தலைவர்களின் வீடுகளில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி வேட்பாளர்களை பண விநியோகம் செய்வதற்கு தாராளமாக அனுமதித்து விட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை சோதனை என்ற பெயரில் தேர்தல் பணிகளை முடக்குவதும், மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரத்திற்கு வழிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவது பாரபட்சமான செயல் மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்குரியது.

தேர்தல் பிரச்சாரம் நேற்று (16.04.2019) மாலை 6 மணியுடன் முடிந்துள்ள நிலையில் எதிர்கட்சிகளின் வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது திட்டமிட்ட சதியாகும். அனைத்து தொகுதிகளிலும் தாங்கள் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில் அதிமுக -– பாஜக தேர்தல் ஆணையத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி இத்தகைய மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் தோல்வி பயத்தால் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு என்றே கவிஞர் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. இத்தகைய குறுக்கு வழியை பயன்படுத்தி தமிழிசை சௌந்தரராஜனோ மற்றும் அதிமுக, பாஜக வேட்பாளர்களோ வெற்றி பெற்று விடலாம் என்பது பகல் கனவாகவே முடியும். மேலும், மேலும் எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பொதுமக்கள் மத்தியில் அதிமுக -– பாஜக அணியின் மீது கோபாவேசம் அதிகரிக்குமே தவிர  அவர்களுக்கு பயன்தராது என்பது திட்டவட்டமானதாகும்.

எனவே, தேர்தல் ஆணையம் அதிமுக -– பாஜக அணியின் தேர்தல் ஏஜெண்ட்டு போல செயல்பட்டு வரும் போக்கினை கைவிட்டு, நடுநிலையிலிருந்து நேர்மையாக செயல்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com