
சென்னை: டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று ஒடிஷாவைத் தாக்கிய பானி புயல் கடுமையான சேதங்களை அம்மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மாநில அரசின் முன்திட்டமிடல் முயற்சிகளின் காரணமாக பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அதற்காக பல்வேறு தரப்பினரும் மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை பாராட்டுகின்றனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமலஹாசனும் நவீன் பட்நாயக்கையும், ஒடிஷா மாநில அரசையும் பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் டார்ச் இருந்தாலும் பார்வைக் கோளாறா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது:
நம்மஊர் கமல் ஒரிசா முதல்வரை மட்டுமே பாராட்டுகிறார் புயல் நிவாரணம் சூப்பர் என்கிறார். இதிலுமா மோடி வெறுப்பு? புயல் வரும் பாதையை துல்லியமாக கணித்து எச்சரிக்கை அளித்த ISRO? களத்தில் முப்படை பேரிடர் மீட்பு குழு? புயல் வருமுன்பே 1000 கோடி நிவாரணம்? டார்ச் இருந்தாலும் பார்வை கோளாறு?
இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...