சென்னை: தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மெதுவாக பரவி வருகிறது. இது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியைக் காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை எளிதாக விட்டுவிட முடியாது. நாட்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொள்ளையடித்த வழக்கில் பிகாரைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நாட்டு துப்பாக்கிகள் பிகாரில் இருந்து வந்திருக்கின்றன. தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மெதுவாகப் பரவி வருகிறது. இந்த துப்பாக்கி கலாசாரம் நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நல்லது அல்ல. தமிழகத்தில் உள்ள ரௌடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு பிகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் விநியோகம் செய்யப்படுகின்றன. எனவே துப்பாக்கி கலாசாரத்தைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது அரசு தரப்பில் இதுகுறித்து காவல்துறை டிஜிபிக்கு தெரியப்படுத்துவதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையரை எதிர்மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொள்ளையடித்ததாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் தமிழகத்தில் எளிதாகக் கிடைக்கிறதா, சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்துக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா, தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக இதுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், தமிழகத்தில் உள்ள ரௌடி கும்பல் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றங்களில் ஈடுபடுகின்றதா, நக்ஸல்கள், சமூக விரோதிகள், ஆயுதங்களை வைத்து சட்டம், ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.