கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல் பிரசவம் அறுவை சிகிச்சை, 2வது சுகப்பிரசவம்:  நன்னிலம் மருத்துவர்கள் சாதனை

நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் நடைபெறச் செய்து நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

News image
முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக பிறப்பதற்கு சிகிச்சை அளித்த நன்னிலம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.
Updated On :18 ஆகஸ்ட் 2020, 1:09 pm

DIN


நன்னிலம்: நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை சுகப்பிரசவம் நடைபெறச் செய்து நன்னிலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் விழிதியூர் கிராமம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சத்யா வயது 24. இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு முதல் குழந்தை அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்ததாக அவரே தெரிவித்துள்ளார். வழக்கமாக முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பெற்றால், தொடர்ந்து நடைபெறும்  பிரசவங்களும் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறும். 

ஆனால் நன்னிலம் தாலுகா மருத்துவமனை மருத்துவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் அந்தப் பெண்ணிற்கு எக்ஸ்ரே, ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைகள் முடிந்தபின், அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து விட்டு, சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டு விட்டு சுகப்பிரசவம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். 
மருத்துவர்கள் நம்பியது போலவே,  முதல் குழந்தையை அறுவைசிகிச்சை மூலம் பெற்றெடுத்த அந்தப் பெண்ணுக்குச் செவ்வாய்கிழமை மதியம் சுகப்பிரசவத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இது போன்ற நிகழ்வுகள் தற்போது மிகப் பெரிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட நடைபெறுவது அரிது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக நன்னிலம் தாலுகா அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் எம்.வினோத்குமார் மற்றும் மகப்பேறு மருத்துவர் பிரதீபா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,  மிகப்பெரிய மருத்துவமனைகளில் கூட இதுபோன்ற சாதனைகள் நிகழ்வுகள் தற்போது நடைபெறுவதில்லை. ஆனால் நாங்கள் நடத்திய மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளின்படி சுகப்பிரசவம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மிகப்பெரிய நம்பிக்கைக் கொண்டிருந்தோம்.

அதே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். மேலும் அந்தப் பெண்ணின் உடல் நிலையையும் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பெண்ணுக்குச் சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது. இது போன்ற நிகழ்வுகள் சமீபகாலங்களில் எங்கும் நடந்ததாக தெரியவில்லை. இவ்வாறு அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, சுகப்பிரசவம் மூலம் இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, திருவாரூர் மாவட்ட மருத்துவ நல மற்றும் சுகாதார பணிகள் துறை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் மற்றும் மருத்துவக் கல்லுரி மருத்துவமனை மருத்துவர்கள் பாராட்டி வாழ்த்தியதாக தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.