போடியில் ஞாயிறன்று தளர்வில்லா பொதுமுடக்கத்திலும் வழக்கம்போல் வாகனங்கள் இயங்கின. திருமண மண்டபங்களில் கூட்டம் களை கட்டியது.
ஜூலை மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வில்லா பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, போடியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால், அனைத்து இறைச்சிக் கடைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்களில் கூட்டம் களை கட்டியது. சில திருமண மண்டபங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கின.
போடியில் பழைய பேருந்து நிறுத்தம், திருமலாபுரம், கருப்பசாமி கோவில், புதூர், வஞ்சி ஓடை தெரு, குலாளர்பாளையம், குப்பிநாயக்கன்பட்டி, சந்தை பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஆங்காங்கு கூட்டமாக அமர்ந்தும், சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் பேசிக் கொண்டிருந்தனர்.