அமராவதி அணை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அமராவதி அணையின் நீர்மட்டம் 87 அடியை எட்டியுள்ளதை அடுத்து கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. இதன் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்தது. இதனால் பாசனப் பகுதிகளில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்களுக்கு போதுமான தண்ணீர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் மூன்று முறை அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 87 அடியை எட்டியது.
இதைத்தொடர்ந்து அணையின் கரையோர பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு உள் வரத்தாக 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணை பகுதியில் பொதுப்பணித்துறையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.