தம்மம்பட்டி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் சனிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்க, தம்மம்பட்டி, கொண்ட யம்பள்ளி செந்தாரப்பட்டி, உலிபுரம், மண்மலை, கொப்பம்பட்டி, மங்கப்பட்டி, பகுதிகளிலிருந்து 150 வாகனங்களில் திமுக நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் சேலத்திற்கு சனிக்கிழமை காலை புறப்பட்டனர். ஆனால் அவர்களது வாகனங்கள் தம்மம்பட்டியை அடுத்த நாகியம்பட்டியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனைக் கண்டித்து அங்கேயே தம்மம்பட்டி - சேலம் நெடுஞ்சாலையில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுகவினர் வாகனங்கள் அனைத்தும் தம்மம்பட்டி - சேலம் சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம் , ஆத்தூர் செல்லும் அனைத்து லாரி, பேருந்துகள் மீண்டும் வந்த வழியே திரும்பிச் செல்கின்றன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.