அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிசான பருவ நெல் சாகுபடிக்கு மணிமுத்தாறு அணை திறக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள 118 அடி நீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை 5511 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கும் திறன் கொண்டது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 102.35 அடியாக உள்ளது. பிசான பருவ நெல் சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து புதன்கிழமை பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது. மூன்றாவது நான்காவது ரீச் களின் கீழ் உள்ள12,018 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 120 நாள்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12,018 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையா பாண்டியன், இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.