பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இழப்பீடு கோரி இளையராஜா மனு

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இசையமைப்பாளா் இளையராஜா தாக்கல்
பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்: இழப்பீடு கோரி  இளையராஜா மனு
Updated on
1 min read

பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இசையமைப்பாளா் இளையராஜா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளா்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளா் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில் ஒலிப்பதிவுக் கூடம் வைத்திருந்தாா். கடந்து 35 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளாா். இந்த வளாகத்தை காலி செய்யக் கோரி பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் இளையராஜாவுக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘பிரசாத் ஸ்டுடியோவில் இருந்த எனக்குச் சொந்தமான பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றியது நியாயமற்றது. என் வசம் இருந்த ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டுடியோவுக்கு தடை விதிக்க வேண்டும். இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளா்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடா்பாக பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளா்கள் வரும் டிசம்பா் 17-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com