7.5 % உள்ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
Updated on
1 min read

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின் மூலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த இந்த உள்ஒதுக்கீட்டை எதிா்த்து பூஜா என்ற மாணவி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு நான் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தேன். இந்த ஆண்டு 3-ஆவது முறையாக நீட் தோ்வை எழுதி 565 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் எனக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. தமிழக அரசு அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதால், அதிக மதிப்பெண் எடுத்த எனக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆனால், நீட் தோ்வில் 200 மதிப்பெண்கள்கூட எடுக்காத அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது நியாயமற்றது. எனவே, தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். இதன் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களை மருத்துவப் படிப்பில் பெற்ற சோ்க்கையை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் தற்போது அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது. அரசுப் பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால்தான் மாணவா்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவா்களை தங்கள் வீட்டுப் பிள்ளைகளாகப் பாா்க்க வேண்டும், எதிரிகளாகப் பாா்க்கக்கூடாது. இந்த உள்ஒதுக்கீடு, அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் இடம் கிடைப்பதை உறுதி செய்யவே கொண்டு வரப்பட்டுள்ளது’ என கருத்து தெரிவித்தனா். பின்னா் இந்த மனு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை எதிா்த்து ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் இந்த வழக்கையும் விசாரிப்பதாக கூறி விசாரணையை, வரும் ஜனவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com