கரூர் மாவட்டத்தில் ரூ. 627 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 118 கோடியில் முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தும் ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முன்னதாக சேலத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கரூர் வெங்கமேடு, கரூர் பேரூந்து நிலையம், லைட்ஹவுஸ் கார்னர் ஆகிய பகுதிகளில் கட்சியினரும் வரவேற்பு அளித்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாந்தோணிமலை பெருமாள் கோவில் சார்பில் பட்டாச்சாரியார்கள் சார்பில் பூரணகும்ப மரியாதை முதல்வருக்கு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ரூ.627 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் தயார் நிலையில் உள்ள ரூ.118.53 கோடியில் மதிப்பிலான பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து முதற்கட்டமாக வருவாய், தோட்டதக்கலை உள்பட 7 துறைகள் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.35 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். மகளிர் குழு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.