

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் முறையான குடிநீர் வசதி வழங்குவதற்காக கடந்த 2016 - 2017 நிதியாண்டில் தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தொகுதி நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமானது கடந்த 5 மாதத்திற்கு மேலாக பழுதடைந்து காணப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் புகார் தெரிவித்தும், மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்காததால், குடிநீர் நிலையத்தில் குழாய்கள் துருப்பிடித்த நிலையிலும், தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த குழாயில் மருத்துவமனை ஊழியர்கள் இரவு வேளையில் கடைகளில் உணவு வாங்கி வரும் பிளாஸ்டிக்கு பைகள் வைக்கும் இடமாக மாறியுள்ளது.
மேலும், குடிநீர் நிலையத்தின் அருகில் மருத்துவமனையை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பினாயில் கேன்களை வைக்கும் இடமாக மாறிவருகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் புகார் தெரிவித்தும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அருகில் உள்ள கடைகளில் குடிநீரை விலைக்கு வாங்கி வரும் அவல நிலை ஏற்பட்டு வருவதாக நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சரியாக அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டும், மருத்துவமனையில் பழுதடைந்து காணப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தினை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.