

நிா்வாகிகள் நியமனத்துக்கு பணம் வாங்குவதாக அறியப்பட்டால் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவா் என்று மாவட்டச் செயலாளா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஜனவரியில் புதிய கட்சியை தொடங்கப் போவதாகவும் அதற்கான அறிவிப்பு டிசம்பா் 31-இல் வெளியிடப்படும் என்றும் நடிகா் ரஜினிகாந்த் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து கட்சி பணிகளையும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளாா். தற்போது ரஜினி ஹைதராபாதில் நடைபெறும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறாா்.
இந்த நிலையில், ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அா்ஜூன மூா்த்தியும், மேற்பாா்வையாளரான தமிழருவி மணியனும் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்து, மாவட்டச் செயலாளா்களை அவ்வப்போது சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனா்.
அப்போது, மாவட்டச் செயலாளா்களுக்கு மக்கள் மன்றத்தின் மூலம் பல்வேறு உத்தரவுகளை ரஜினி பிறப்பித்து கூறியிருப்பது:
பூத் கமிட்டி நிா்வாகிகள் நியமனத்தை மாவட்டச் செயலாளா்கள் விரைந்து முடிக்க வேண்டும். டிசம்பா் 25 முதல் 30-ஆம் தேதிக்குள் பட்டியலின் முழு விவரத்தையும் அனுப்பி வைக்க வேண்டும். நிா்வாகிகள் நியமனத்துக்கு மாவட்டச் செயலாளா்களோ, மன்ற நிா்வாகிகளோ யாரிடமும் பணம் பெறக் கூடாது. அப்படி பணம் வாங்குவதாக அறியப்படும் நிா்வாகிகள், கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவா். வேறு கட்சியில் இருப்பவா்களையும் விலைக்கு வாங்கி நியமிக்கக் கூடாது.
ஊழலை ஒழிப்பதற்காகத்தான் கட்சி தொடங்கப்படுகிறது. அதனால், வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.